Friday, February 13, 2009

காதலர் தினம் என்றால்...

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா? இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா? முதலில், காதலர் தினம் காதலர்களால் மட்டுமே கொண்டாடப்படவேண்டிய ஒன்றா?

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.

காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.

இவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே! அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)
Have a great day!

Sunday, February 08, 2009

தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ
அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா?- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?- வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய்- நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே- நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்- ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய்- உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம்- பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்- உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்- உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

நான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)